ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 86 வயதான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். கடந்த 36 ஆண்டுகளாக ஈரானின் உச்ச தலைவராக இருந்த அவரது மறைவு, மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய மரபுப்படி 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டியிருந்தாலும், போர்ச் சூழல் காரணமாக கமேனியின் இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கு வரும் ஜூலை மாதம் நடைபெறும் என ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இறுதிச்சடங்கு நிகழ்வுகள் - முக்கிய தேதிகள் மற்றும் இடங்கள்
அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு பல நாட்கள் நீடிக்கும் வகையில், பல நகரங்களில் நடைபெறவுள்ளது:
ஜூலை 4 & 5 (சனி, ஞாயிறு): தெஹ்ரானின் கிராண்ட் இமாம் கோமெய்னி மொசல்லா வளாகத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வு.
ஜூலை 6 (திங்கள்): தெஹ்ரானில் முக்கிய இறுதி ஊர்வலம். கமேனியுடன் மேலும் நான்கு முக்கிய நபர்களின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஜூலை 7 (செவ்வாய்): புனித நகரமான கோமில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள்.
ஜூலை 8 (புதன்): ஈராக்கின் நஜாப் மற்றும் கர்பலா நகரங்களில் இறுதி நிகழ்வுகள்.
ஜூலை 9 (வியாழன்): கமேனியின் சொந்த ஊரான வடகிழக்கு ஈரானின் புனித நகரமான மஷ்ஹாத்தில் உள்ள இமாம் ரேசா சன்னிதியில் அடக்கம்.
இந்தியாவின் பதில் என்ன?
ஈரானிய தூதரகம் மூலம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தரப்பில் இருந்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி நேரில் கலந்து கொள்வாரா அல்லது வேறு மூத்த அதிகாரி பிரதிநிதியாக அனுப்பப்படுவாரா என்பது குறித்து இந்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்த முடிவு இந்தியாவின் மூலோபாய நலன்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்தியா, ஈரானுடன் சபாஹர் துறைமுகத் திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான உறவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த சமநிலையான பார்வையே இந்தியாவின் முடிவை தீர்மானிக்கும்.
சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது நாட்டின் தூதுக்குழு பங்கேற்கும் என அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

