தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடத்தப்பட்டுள்ளது. பிரதான சந்தேகநபருக்கும், அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருப்பதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மேலும் ஒரு சந்தேகநபர் ஆகியோரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் நேற்று (ஜூன் 25) அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி (ஜூன் 17) தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. உயிரிழந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் காதலர் எனக் கூறப்படும் நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். வெள்ளவத்தையில் இருந்து பேருந்தில் பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் கைதாகும் போது மாறு வேடத்தில் இருந்தமையும், அவர்கள் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நீதிமன்ற அனுமதியின் பேரில் அவர்கள் 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளனர்.

