ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மீண்டும் வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்நாட்டின் வடமத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
பிளாட்டோ மாகாணம் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழ்நிலையில் இருந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் மக்கள் தங்களது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் மர்ம ஆயுதக் கும்பல் ஒன்று அங்கு புகுந்துள்ளது.
அந்த கும்பல் திடீரென பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற மக்கள் மீதும் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொடூர தாக்குதலில் பெண்கள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய கும்பலுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த ஆயுதக் கும்பல் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

