வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் கடந்த வாரம் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் ஒகில்வி என்பவர், செயற்கை மூச்சுக்குழாய் ஆதரவில் இருந்து மீண்டு விழித்தெழுந்துள்ளார். ஆனால், இடது கண்ணை முற்றிலுமாக இழந்த அவரது வலது கண்ணிலும் பார்வை செல்லும் அபாயம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் பெல்ஃபாஸ்டின் வடக்குப் பகுதியான கினார்ட் அவென்யூவில் நடந்த இந்த தாக்குதலில், ஒகில்வியின் தலை, முகம் மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் ஆழமான கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. இது அவரது இடது கண் பார்வையை முழுமையாக இழக்க வழிவகுத்தது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 30 வயதான ஹதி அலோடிட் என்பவர், பாலியல் பலாத்கார முயற்சி குற்றச்சாட்டில் பெல்ஃபாஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் அடுத்த முறை ஜூலை 8 ஆம் தேதி வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றில் ஆஜராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகில்வியின் பெற்றோர், தங்கள் மகனுக்காக GoFundMe இணையதளத்தில் நிதி திரட்டும் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். "இந்த தாக்குதலுக்குப் பிறகு ஸ்டீபன் தனது புதிய வாழ்க்கைக்கு ஏற்பவும், தினசரி தேவைகளுக்கும் இந்த நிதி உதவும்.
இடது கண் பார்வை இழப்பும், வலது கண்ணிலும் பார்வை இழக்க நேரிடும் என்ற பயங்கர சூழலில், உங்கள் தாராள மனப்பான்மை அவரது எதிர்கால வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், "எங்கள் குடும்பத்தை ஒருபோதும் சந்திக்காத பலரின் அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் மனம் நெகிழச் செய்துள்ளது" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான மிருகத்தனமான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பெல்ஃபாஸ்ட்டில் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தில் வீடுகள், கார்கள் மற்றும் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் மக்கள் இன அடிப்படையில் குறிவைக்கப்பட்டனர்.
இந்த கலவரம் குறித்து வடக்கு அயர்லாந்து காவல்துறை தெரிவிக்கையில், இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 23 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சூடான் நாட்டைச் சேர்ந்த அலோடிட், பிப்ரவரி 2023 இல் பாரீஸிலிருந்து டப்ளினுக்கு விமானத்தில் வந்து, பின்னர் பேருந்து மூலம் வடக்கு அயர்லாந்திற்குள் நுழைந்தவர் என்றும், அவர் வந்த உடனேயே தஞ்சம் கோரி, 2028 வரை UK இல் தங்க அனுமதி பெற்றவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


