நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தற்காலிகத் தடையை எதிர்த்து, டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி தேஜஸ் கரியா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், இரு தரப்பு வாதங்களையும் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
டெலிகிராம் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்குறிஞர், நீட் வினாத்தாள் கசிவு தொடர்புடைய இணைப்புகளை ஒரு மணி நேரத்திற்குள் அழித்ததாகவும், சில இணைப்புகளை அழிக்கப் பெறப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், டெலிகிராம் செயலி முடக்கப்பட்டதால் ஆசிரியர்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒன்றரை கோடி பயனாளர்களைக் கொண்ட இந்தச் செயலியை முடக்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் வாதிடப்பட்டது.
மத்திய அரசு சார்பில் சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், டெலிகிராம் செயலி தற்போது சைபர் கிரிமினல் குற்றவாளிகளும் பயங்கரவாதிகளும் பயன்படுத்தும் கூடாரமாக மாறியுள்ளதாகவும், செயலியை தற்காலிகமாக முடக்கியது சரியான நடவடிக்கை என்றும் அவர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் பதிவுசெய்துகொண்ட நீதிபதி தேஜஸ் கரியா, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


