திருகோணமலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட நான்கு தேரர்களை பார்வையிட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று வெள்ளிக்கிழமை (16) திருகோணமலை சிறைக்கு சென்றார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே தேரர்கள் உள்ளிட்ட சில பொதுமக்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், “கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களத்தின் மீது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அழுத்தம் செலுத்தியுள்ளார். தற்போது அவர் தந்திரமாக விலகிக்கொண்டாலும், அந்த திணைக்களம் தனித்து விடப்பட்ட நிலையில் உள்ளது” எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

