நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நிலவும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அப்பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
நேற்று இரவு நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமையை நேரில் அவதானித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுவிற்கும், அதனை எதிர்க்கும் குழுவிற்கும் இடையே ஆரம்ப மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பு கைதிகளும் காயமடைந்ததுடன், 2 கைதிகள் உயிரிழந்தனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.
அடுத்து, நேற்று காலையில் மீண்டும் கைதிகளுக்கிடையே மோதல் மூண்டது. சிறைச்சாலை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த முயன்றபோது, கைதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 17 கைதிகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உண்மைகள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் இது குறித்த விசாரணைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக் கருதி சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ, தும்பறை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நேற்று கூடிய அமைச்சரவை, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவொன்றை நியமித்தது.
ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மோகன் வீரக்கோன் ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து, அதற்கான காரணங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மற்றும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்த பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.
மோதலில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. இறந்த கைதிகளை அடையாளம் காணும் வகையில் அவர்களது உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று அவர்களை அடையாளம் காண்பதற்கான வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
