திரையுலகில் தனக்கு உடன்பாடு இல்லாத காட்சிகள் மற்றும் ஆடைகளை நிராகரிப்பதில் எந்தத் தயக்கமும் காட்டப் போவதில்லை என நடிகை கயாடு லோஹர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரைப்படமான 'முகில்பேட்டை' மூலம் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் நடித்த 'பள்ளிச்சட்டம்பி', தமிழில் 'இதயம் முரளி' ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது ஜி.வி. பிரகாஷுடன் 'இம்மார்டல்' படத்திலும், இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் படப்பிடிப்புத் தளத்தில் தனக்கான எல்லைகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். "படப்பிடிப்பில் எனக்கு உடன்பாடு இல்லாத ஆடைகளோ அல்லது காட்சிகளோ இருந்தால், அதை இயக்குநர் மற்றும் படக்குழுவினரிடம் நேரடியாகவும் வெளிப்படையாகவும் கூறிவிடுவேன். சினிமா துறையில் எந்தவொரு விஷயத்திலும் தயங்காமல் பேசுவது மிகவும் அவசியமானது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஒவ்வொரு நடிகருக்கும் என்று தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அந்த எல்லைகளை அனைவரும் மதிக்க வேண்டும். திறந்த மனதுடன் பேசுவது மட்டும்தான் படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணிச்சூழலை உருவாக்கும்.
எனவே, நம்முடைய எல்லைகளில் நாம் உறுதியாக இருப்பதும், நம் கவலைகளைத் தயாரிப்புத் தரப்பிடம் வெளிப்படுத்துவதும் மிகவும் முக்கியம்" எனத் கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
