அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு பெறும் விதிகளை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியது. அதன்படி, அங்கே தங்கியிருப்பவர்கள் கிரீன் கார்டு பெறுவதற்காக மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி, அங்கிருந்துதான் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை வெளிநாட்டினரைக் கடுமையாகப் பாதித்தது. மேலும், இதற்கு அமெரிக்க உள்நாட்டிலும் எதிர்ப்புக் கிளம்பியது. இதைத் தொடர்ந்து, தனது முந்தைய அறிவிப்பில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ளது. எல்லா வெளிநாட்டினரும் கிரீன் கார்டுக்காக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியதில்லை எனப் புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு மனுவையும் பொறுத்து அந்தந்த அதிகாரிகளே முடிவு செய்வார்கள் என்றும், விண்ணப்பிப்பவர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டுமா இல்லையா என்பதை அதிகாரிகளே தீர்மானிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
விசாக் காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் அல்லது பொது நல உதவிகளை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் போன்றவர்கள் மட்டுமே இந்த அறிவிப்பால் பாதிக்கப்படக் கூடும் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

