மெக்சிகோவில் மிகவும் சக்திவாய்ந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன்' (CJNG) போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான நெமசியோ ஓஸ்குவெரா (El Mencho) பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்துள்ளது.
மெக்சிகோ ராணுவமும் சிறப்புப் படையினரும் இணைந்து ஜாலிஸ்கோ மாகாணத்தின் போர்ட்டோ வல்லார்தா பகுதியில் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையின்போது இந்த முக்கியத் தலைவன் கொல்லப்பட்டார்.
இந்தத் தகவல் பரவியதும் ஆத்திரமடைந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் போர்ட்டோ வல்லார்தா, குவாதலஜாரா மற்றும் தபல்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரிய வன்முறைகளில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்து பேருந்துகள் மற்றும் கார்களுக்குத் தீ வைத்ததுடன், விமானச் சேவைகளையும் முடக்கினர்.
இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட மோதலில், தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் வீரமரணமடைந்ததாக ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உமர் கார்சியா ஹர்புக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் ஜாலிஸ்கோவில் 30 குற்றவாளிகளும், அண்டை மாகாணமான மிச்சோவாகனில் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் சுமார் 250 இடங்களில் வன்முறைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான சூழலைத் தணிக்கவும் வன்முறையாளர்களை ஒடுக்கவும் கூடுதலாக 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் அப்பகுதிகளில் குவிக்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

