சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில் சிஎஸ்கே அணி, கொல்கத்தா அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முக்கியமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்குப் பிறகு அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது கருத்துகளை பகிர்ந்தார்.
போட்டியின் நிலை குறித்து பேசிய அவர், ஆரம்ப ஓவர்களுக்குப் பிறகு பிச்சின் தன்மை முற்றிலும் மாறிவிட்டதாக கூறினார். “முதல் 7 அல்லது 8 ஓவர்களுக்கு பிறகு பந்து நன்றாக சுழல ஆரம்பித்தது. சில நேரங்களில் பந்து நின்று வந்தது. ஆரம்பத்தில் 210–220 ரன்கள் அடிப்போம் என்று நினைத்தோம். ஆனால் பின்னர் 180–190 ரன்களே நல்ல ஸ்கோர் என்று தோன்றியது,” என்றார்.
பந்துவீச்சின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். “பவர்ப்ளேவில் நல்ல தொடக்கம் கிடைப்பது முக்கியம். அதன் பிறகு ரன் ரேட்டை கட்டுப்படுத்தினால் போதும். எங்கள் பந்துவீச்சாளர்கள் அதைப் பொறுப்புடன் செய்தார்கள்,” என்று பாராட்டினார்.
தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பற்றி பேசிய கெய்க்வாட், அணியின் முன்னேற்றம் குறித்து நம்பிக்கை தெரிவித்தார். “ஒவ்வொருவரும் தங்களது பங்கு என்ன என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளனர். எந்த ஓவரில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதிலும் தெளிவு வந்துள்ளது. நாங்கள் மெதுவாக மேம்பட்டு வருகிறோம் – இது நல்ல அறிகுறி,” என்றார்.
தனது பேட்டிங் பார்ம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அது மனதில் இருந்தது. ஆனால் இப்போது நன்றாக உணர்கிறேன். அணிக்கு என்ன தேவை என்பதைச் செய்வதே முக்கியம். மனதளவில் நேர்மறையாக இருக்கிறேன். விரைவில் ஒரு பெரிய இன்னிங்ஸ் வரும்,” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இந்த வெற்றி சிஎஸ்கே அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ள நிலையில், ரசிகர்கள் அணியின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

