இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை (NCPI) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட பணவீக்கம், கடந்த பிப்ரவரி மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவு சரிவடைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தனது புதிய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி மாதத்தில் 2.4% ஆகப் பதிவாகியிருந்த ஒட்டுமொத்தப் பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 1.6% ஆகக் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த விலைவாசி, தற்போது ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்திருப்பது நுகர்வோர் மத்தியில் ஒரு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குறைவிற்கு மிக முக்கியக் காரணமாக உணவுப் பொருட்களின் விலையிறக்கம் பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதத்தில் 3.4% ஆகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 1.1% ஆக அதிரடியாகச் சரிந்துள்ளது.
சந்தையில் மரக்கறிகள், பச்சை மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் அதிகரித்தமையே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உணவுப் பொருட்களின் விலைவாசி ஓரளவுக்குக் குறைந்திருப்பது சாமானிய மக்களின் மாதாந்திரச் செலவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், உணவு அல்லாத பிரிவில் பணவீக்கம் சற்று அதிகரித்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஜனவரியில் 1.6% ஆக இருந்த உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம், பிப்ரவரியில் 1.9% ஆக உயர்ந்துள்ளது.
வீட்டு வாடகை, கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளுக்கான செலவுகள் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணமாகும். பணவீக்கம் ஒட்டுமொத்தமாகச் சரிந்திருந்தாலும், சேவைத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய உயர்வு நடுத்தர வர்க்கத்தினருக்குச் சவாலாகவே உள்ளது. எவ்வாறாயினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி நகர்த்த மத்திய வங்கி திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

