மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவர் சுஷில் தாகே, நீட் (NEET) மறுதேர்வை எழுதிய பிறகு உருக்கமான வீடியோவைப் பதிவுசெய்து, தனது குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. ஆனால், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மே 12-ம் தேதி தேசிய தேர்வு முகமை (NTA) முழு தேர்வையும் ரத்து செய்து மறுதேர்வு அறிவித்தது. கடந்த ஜூன் 21-ம் தேதி 5,500-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இந்த மறுதேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
மாணவர் சுஷிலும் இந்த மறுதேர்வை எழுதியிருந்தார். ஆனால், தேர்வுக்குப் பிறகு மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட அவர், தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
தற்கொலைக்கு முன்னதாக அவர் பதிவு செய்த வீடியோவில், "என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா.. நான் எனது உயிரை எடுத்துக் கொள்ளப் போகிறேன். தயவு செய்து கவலைப்படாதீர்கள். அடுத்த பிறவியில் மீண்டும் உங்கள் மகனாக பிறப்பேன். ஆனால் இது போன்ற வலியை உங்களுக்கு தரமாட்டேன். என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு எதுவுமே புரியவில்லை" என்று உருக்கமாக கூறியுள்ளார். பின்னர் அந்த வீடியோவை குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து உயிர் துறந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு கசிவு மற்றும் மறுதேர்வு என்பவை மாணவர்களின் மனநிலையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இந்த சம்பவம் கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உரிய ஆலோசனைகளும், ஆதரவும் அவசியம் என்பதை இந்த சோகமான சம்பவம் உணர்த்துகிறது.

