அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதி ஒப்பந்தத்துக்கு பிறகு, முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியாக 11 இந்திய வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாரசீக வளைகுடா பகுதியில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இரு நாடுகளும் தற்காலிக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் நிரந்தர அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த 60 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஒப்பந்தத்திற்குப் பிறகு ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவை நோக்கி வரும் 11 வணிகக் கப்பல்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பயணித்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இதனை உறுதிப்படுத்தினார். இந்திய கொடியை ஏந்திய 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் உட்பட பல்வேறு சரக்கு கப்பல்கள் இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த கப்பல்களில் சுமார் 2 லட்சத்து 85 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் இருப்பதாகவும், மேலும் எண்ணெய், எரிவாயு மற்றும் உரம் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் பிற நாடுகளின் கப்பல்களும் இந்தியா நோக்கி பயணிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாரசீக வளைகுடா பகுதியில் இந்தியாவுக்கு வர வேண்டிய 12 கப்பல்கள் தற்போது பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

