ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலாக, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் ராணுவ, விமான மற்றும் கடற்படை தளங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது. இதன் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து, பல நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமான நிலையில் உள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரான், இஸ்பகான், லோரஸ்தான், இலாம், கெர்மன்ஷா, கராஜ், தப்ரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல்கள் உள்ளன; குறிப்பாக, ஹார்மோஸ்கன் மாகாணம் மினாப் நகரில் ஒரு பெண்கள் தொடக்கப் பள்ளியில் 85 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் பதில் தாக்குதலில், 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ஜெருசலேம் நகரங்களின் ராணுவ தளங்களுக்கு வீசப்பட்டன. ரியாத், தோஹா, அபுதாபி, குவைத் உள்ளிட்ட நகரங்களில் அமெரிக்க ராணுவ தளங்களையும் குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
இந்த தாக்குதலால், புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் வசிக்கும் 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும், பஹ்ரைன், யுஏஇ, சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளில் அமெரிக்கா ராணுவ, விமான படைகள் மற்றும் விமான தளங்களுக்கு ஈரான் ஏவுகணைகள் தாக்கியதால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை தீவிரமானது.

