சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை இலங்கை அணியின் தசுன் ஷனகா பதிவு செய்துள்ளார். இதன்மூலம், இதற்கு முன்பு 15 முறை டக் அவுட்டான ருவாண்டா வீரர் ஜாப்பி பிமென்மானாவின் சாதனையை அவர் கடந்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 10வது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்த அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் தசுன் ஷனகா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 16 முறை டக் அவுட்டான வீரர் என்ற சாதனையை தசுன் ஷனகா தனது பெயரில் பதிவு செய்துள்ளார். எனினும் போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

