உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லிசாரி கேட் பகுதியில், வீடு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் மற்றும் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தின் போது வீட்டில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், வீட்டில் சிக்கியிருந்தவர்களில் 6 பேரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும், பலத்த தீக்காயமடைந்த மற்றொரு பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து மீரட் மாவட்ட மாஜிஸ்திரேட் விஜய் குமார் சிங் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் பாண்டே ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்த மின் சாதனம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

