மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இறுதி ஒப்பந்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வந்தது. இந்த சூழலில்தான் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சிங்கப்பூர் கப்பல் ஒன்றை ஈரான் தாக்கிய சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியது.
இதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானின் ரேடார் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் உடனடியாக பதிலடி கொடுத்தது. குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானப்படைத் தளம் மற்றும் பக்ரைனில் உள்ள சல்மான் துறைமுகத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தலைமையகத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளையும் டிரோன்களையும் ஏவியது.
இருப்பினும், அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு, அந்த ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்து தகர்த்தன. இத்தாக்குதலால் குவைத் மற்றும் பக்ரைனில் அவசர எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், "போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறிய ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சேமிப்பு இடங்கள், கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரானியர்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதில்லை. விரைவில் நாங்கள் இனிமேலும் பொறுமை காட்ட முடியாத ஒரு நிலை வரலாம். அப்போது நாங்கள் இராணுவ ரீதியாக இந்தப் பணியை முடிக்க நிர்பந்திக்கப்படுவோம். அப்படி நடந்தால், ஈரான் என்ற பெயரில் ஒரு நாடே இந்த பூமியில் இருக்காது" என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
