வாஷிங்டன் / தெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் கடுமையான இராணுவ மோதல் வெடித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, நான்கு மாதங்களாக நீடித்துவந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது சீரழிந்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் போர் நிறுத்தத்தை மீறியதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
அமெரிக்க - ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல், ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபத்திய நிகழ்வுகள் அமைந்தன. கடந்த ஜூன் 25-ம் தேதி, சிங்கப்பூர் கொடியேற்றிய 'எவர் லவ்லி' (M/V Ever Lovely) என்ற சரக்குக் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்தபோது, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) நடத்திய டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது. இதையடுத்து சர்வதேச கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை (CENTCOM) ஜூன் 26-ம் தேதி ஈரானின் தெற்கு கடற்கரையோரம் உள்ள நான்கு முக்கிய இலக்குகளை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தியது. ஆறு அமெரிக்க போர் விமானங்கள் பங்கேற்ற இந்த தாக்குதலில், ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் கிடங்குகள், கடலோர ரேடார் வசதிகள் ஆகியவை தாக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்கா ஜூன் 27-ம் தேதியும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் குவாசம் தீவில் உள்ள சிரிக் நகர் மற்றும் ஹர்முஸ்கன் மாகாணத்தில் உள்ள பண்டர் இ லெங்கா ஆகிய நகரங்களில் உள்ள இராணுவ தளங்களை அமெரிக்கா குறிவைத்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியில் நடத்தப்பட்ட தாக்குதலை 'முட்டாள்தனமான மீறல்' என்று கண்டித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், "ஈரானுக்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல்கள் "கண்காணிப்பு உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு அமைப்புகள், வான் பாதுகாப்பு நிலைகள், டிரோன் கிடங்குகள் மற்றும் சுரங்கம் வைக்கும் திறன்கள்" ஆகியவற்றை குறிவைத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு ஈரான் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து இணைந்த ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
IRGC வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக, குவைத்தில் உள்ள அலி அல்-சேல ் மற்றும் அஹ்மத் அல்-ஜாபர் விமானத் தளங்களிலும், பஹ்ரைனில் உள்ள ஷேக் இசா விமானத் தளம் மற்றும் ஐந்தாவது கடற்படை தளத்திலும் உள்ள 8 முக்கிய அமெரிக்க இராணுவ வசதிகளை அழித்தோம்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மோதல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய பரவலான தாக்குதலில் தொடங்கியது. அதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.
பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்றும், தங்கள் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்திருந்தது. அந்த எச்சரிக்கையின் அடிப்படையிலேயே தற்போதைய மோதல் வெடித்துள்ளது.
இரு தரப்பு தாக்குதல்களும் தொடர்ந்து வருவதால், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் உச்ச தலைவரின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய், அமெரிக்கா இரண்டு ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒவ்வொரு மீறலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த மோதல் சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
