உலகின் மிக உயரமான மலையான மவுண்ட் எவரெஸ்ட் மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. 2026 மே 20 அன்று ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து புதிய உலகச் சாதனை படைத்துள்ளனர். இதில் 124 சர்வதேச மலையேற்ற வீரர்களும், 150 ஷெர்பாக்களும் இணைந்து பங்கேற்றனர்.
இந்த சாதனை, 2019 ஆம் ஆண்டு ஒரே நாளில் 223 பேர் எவரெஸ்ட் உச்சியை அடைந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த ஆண்டு திபெத் வழியாக செல்லும் வடக்கு பாதையை சீன அதிகாரிகள் மூடியதால், அனைத்து மலையேற்ற முயற்சிகளும் நேபாளத்தின் தெற்கு பாதை வழியாகவே நடைபெற்றன.
வசந்தகாலத்தில் சில நாட்களுக்கு மட்டுமே நிலவும் தெளிவான வானிலை இந்த சாதனையை சாத்தியமாக்கியதாக மலையேற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன. சாதகமான காலநிலை காரணமாக பல குழுக்கள் ஒரே நேரத்தில் உச்சியை அடைய முயற்சி மேற்கொண்டன.
இந்த சாதனை முயற்சியில் இந்தியாவைச் சேர்ந்த துளசி ரெட்டி பால்புனூரி, சந்தீப் ஆரே மற்றும் அஜய் பால் சிங் தாலிவால் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். நேபாளம் சுற்றுலாத்துறை இந்த ஆண்டிற்காக 494 எவரெஸ்ட் அனுமதிகளை வழங்கியிருந்தது. ஒவ்வொரு அனுமதிக்கும் சுமார் 15,000 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவரெஸ்ட் மலையேற்ற வரலாறு பல சாதனைகளால் நிறைந்துள்ளது. 1953 மே 29 அன்று சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகியோர் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். அதன் பின்னர் உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த சிகரத்தை அடைய முயற்சி செய்து வருகின்றனர்.
1975 ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த ஜூன்கோ தாபெய் எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் பெண்ணாக வரலாறு படைத்தார். இந்தியாவில் இருந்து பச்சேந்திரி பால் 1984 ஆம் ஆண்டு எவரெஸ்ட் ஏறிய முதல் இந்தியப் பெண்ணாக சாதனை படைத்தார்.
அதேபோல், மலாவத் பூர்ணா 13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலகின் இளைய பெண் மலையேற்ற வீராங்கனையாக பெயர் பெற்றார். மாற்றுத்திறனாளிகளிலும் பலர் இந்த சிகரத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். அருணிமா சின்ஹா செயற்கைக் காலுடன் எவரெஸ்ட் ஏறிய முதல் பெண்மணியாக உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றார்.
எவரெஸ்ட் மலையில் அதிக முறை ஏறிய சாதனையை காமி ரீட்டா ஷெர்பா தனது பெயரில் வைத்துள்ளார். அவர் 32 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து “எவரெஸ்ட் மேன்” என அழைக்கப்படுகிறார். 2026 ஏப்ரலில் 32வது முறையாக உச்சியை அடைந்த அவர், அதன்பிறகு தனது ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

