ஜப்பானின் புகுஷிமா பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி நான்கு பேரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஈடுபட்ட கரடி இன்னும் பிடிபடாததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். புகுஷிமாவின் சசாகினோ மாவட்டத்தில் உள்ள 'புகுஷிமா ஸ்டீல் ஒர்க்ஸ்' என்ற இரும்புத் தொழிற்சாலையில் புகுந்த கரடி, அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகப் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்குள்ள பாதுகாப்பு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு கரடி தொழிற்சாலை வாசலில் 20 வயது ஊழியர் ஒருவரைத் துரத்திச் சென்று தாக்குவது பதிவாகியிருந்தது. அதன்பின்னர், தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்த அந்தக் கரடி, 60 வயது மதிக்கத்தக்க இன்னொரு ஊழியரையும் கடித்துக் குதறியுள்ளது. இதுமட்டுமின்றி, அருகிலுள்ள மற்றொரு நிறுவனத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவரையும், குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி ஒருவரையும் இந்தக் கரடி அடுத்தடுத்துத் தாக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்தத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் நான்கு பேரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய கரடி இன்னும் பிடிபடவில்லை. அது ஒரு தனியார் நிறுவன வளாகத்திற்குள் மறைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியைக் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள நோடா ஆரம்பப் பள்ளி உட்பட இரண்டு பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேவையற்ற வெளிப்பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ஜப்பானில் மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் கரடிகளின் ஊடுருவலும், மனிதர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் ஜப்பானில் கரடிகள் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 230க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் வரலாற்றிலேயே கரடித் தாக்குதலால் இந்த அளவிற்கு உயிரிழப்புகளும் பாதிப்புகளும் ஏற்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இச்சம்பவம், கடந்த ஆண்டு அகிட்டா மாகாணத்தில் நடந்த கொடூரச் சம்பவத்தை நினைவூட்டியுள்ளது. அங்கு 60க்கும் மேற்பட்டோரைக் கரடி தாக்கிய நிலையில், அதில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் மனிதர்களின் மக்கள்தொகை வேகமாகச் சரிந்து வருகிறது. முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கரடிகளை வேட்டையாடவோ அல்லது கட்டுப்படுத்தவோ போதிய இளைஞர்கள் இல்லாததே இந்த ஊடுருவலுக்கு முக்கியக் காரணம் என வனவிலங்கு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

