ஒரு பான் இந்தியா நடிகர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அவரை அறைந்ததாக நடிகை பூஜா ஹெக்டே கூறியதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள பூஜா ஹெக்டே, தமிழில் பீஸ்ட், ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். சமீபத்தில் அவர் விஜய் உடன் இணைந்து ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் அளித்ததாக கூறப்படும் ஒரு பேட்டியில், “ஒரு பெரிய படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, பான் இந்தியா நடிகர் ஒருவர் அனுமதியின்றி எனது கேரவனுக்குள் நுழைந்து தவறான முறையில் நடந்துகொண்டார். இதனால் அவரை கன்னத்தில் அறைந்தேன். அதன் பின்னர் அவருடன் மீண்டும் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை” என்று தெரிவித்ததாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இந்த பேட்டி எந்த ஊடகத்துக்கு அளிக்கப்பட்டது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, ராதே ஷ்யாம் படப்பிடிப்பின் போது நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக முன்பே பரவிய உறுதிப்படுத்தப்படாத வதந்திகளுடன் இந்த தகவலை இணைத்து, அந்த நடிகர் பிரபாஸா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறான தகவல்கள் பரவினாலும், இதுகுறித்து பூஜா ஹெக்டே இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதே நேரத்தில், ஹாலிவுட், பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படங்கள் தொடர்பான செய்திகளை தொடர்ந்து பகிர்ந்து வரும் திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார். இது 100 சதவீதம் பொய்யான செய்தி என்றும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனால், பூஜா ஹெக்டே குறித்த இந்த சர்ச்சை உண்மையா அல்லது வதந்தியா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே விவாதமாகி வருகிறது.

