தென் கொரியாவில் மிருகக்காட்சிசாலையில் இருந்து தப்பி ஓடிய ஓநாய் ஒன்றைத் தேடும் பணியின் போது, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைப் பகிர்ந்து அதிகாரிகளைத் திசைதிருப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள ஓ-வேர்ல்ட் மிருகக்காட்சிசாலையிலிருந்து கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி ‘நெக்கு’ (Neuku) என்ற இரண்டு வயதுடைய ஓநாய் தப்பியது. அழிந்து வரும் நிலையில் உள்ள கொரிய ஓநாய்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்ட இந்த ஓநாயைத் தேடும் பணியில் அந்நாட்டு அதிகாரிகளும் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
ஓநாய் தப்பிய சில மணிநேரங்களில், அது ஒரு சாலைச் சந்திப்பில் நடந்து செல்வது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. 40 வயதான ஒருவர், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் போலிப் புகைப்படத்தை உருவாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை உண்மை என நம்பிய டேஜியோன் நகர அரசு, மக்களுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், தேடுதல் குழுவினரையும் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பியது. இதனால் அதிகாரிகளின் தேடுதல் பணி தவறான திசையில் சென்று வீணானது.
பாதுகாப்பு கெமராக்கள் மற்றும் AI மென்பொருள் பயன்பாட்டுத் தரவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர், குறித்த நபரைக் கைது செய்தனர். விசாரணையின் போது, அவர் “வெறும் வேடிக்கைக்காக” இதைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
அரசுப் பணிகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 10 மில்லியன் கொரிய வொன் (சுமார் 6,700 டொலர்) அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சுமார் 9 நாட்களுக்குப் பிறகு, ஒரு நெடுஞ்சாலைக்கு அருகில் ‘நெக்கு’ பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டது. தற்போது அந்த ஓநாய் மீண்டும் மிருகக்காட்சிசாலையில் விடப்பட்டுள்ளது. இந்தத் தேடுதல் வேட்டை தென் கொரிய மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது.
ஜனாதிபதி லீ ஜே மியுங் கூட, ஓநாய் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டும் எனப் பிரார்த்தித்திருந்தார். தற்போது ‘நெக்கு’ அந்த நகரின் உத்தியோகபூர்வ அடையாளச் சின்னமாக அறிவிக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

