ஈரானில் போராட்டக்காரர்களுக்கு எதிரான கடுமையான அரச அடக்குமுறைகள் தீவிரமடைந்த நிலையில், அந்நாட்டை இலக்காகக் கொண்டு இராணுவ தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை இரவு, வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் ரூமில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரைவில் இராணுவ நடவடிக்கைக்குத் தீர்மானம் எடுக்கலாம் என அவரது தேசிய பாதுகாப்பு குழுவினர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஈரானில் இடம்பெற்ற கடந்த கால மரண தண்டனைகள் மற்றும் தற்போதைய போராட்டங்களில் நிகழக்கூடிய கொடூர காட்சிகள் தொடர்பான காணொளிகள் டிரம்பை மனதளவில் கடுமையாக பாதித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 26 வயதுடைய போராட்டக்காரர் எர்ஃபான் சோல்தானிக்கு ஜனவரி 14 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற தகவல், ஜனாதிபதியை பெரிதும் கவலைக்குள்ளாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், டிரம்ப் அனைத்து விருப்பங்களையும் தொடர்ந்து ஆராய்வதாக கூறியிருந்தார். புதன்கிழமை காலை, ஈரானியர்களை வீதிகளில் இறங்க ஊக்குவித்தும், “உதவி வரும்” என அறிவித்தும், அவர் இராணுவ நடவடிக்கைக்கு மேலும் அருகில் சென்றதாகத் தோன்றியது.
ஆனால், அதே நாளின் பின்னர், “மற்றுபுறத்தில் உள்ள முக்கிய தகவல் ஆதாரங்கள்” கொலைகள் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாக டிரம்ப் கூறியமை, தாக்குதல் உடனடியாக நடைபெறாது என்பதற்கான சைகையாக அமைந்தது. அதே நேரத்தில், அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் போராட்டக்காரர்களைக் கொல்வது நிறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை. இதனால், இராணுவ தாக்குதல் சாத்தியமென பல அதிகாரிகள் நம்பியிருந்தனர். இதன் காரணமாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய விமானத் தளத்திலிருந்து அவசியமற்ற பணியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
வெள்ளை மாளிகை, இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து விருப்பங்களும் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. “கொலைகள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை ஈரான் அரசுக்கு ஜனாதிபதி தெளிவாக அறிவித்துள்ளார்” என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் சில முக்கிய கூட்டாளிகள் இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதன் விளைவாக டிரம்ப் தற்காலிகமாக தாக்குதலை ஒத்திவைக்கத் தயாரானதாகவும் கூறப்படுகிறது. புதன்கிழமை பிற்பகலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அரசு விரைவில் வீழ்ச்சி அடையாது என்றும், நீண்டகால மோதலால் பிராந்திய பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்றும் இஸ்ரேல் தரப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானைச் சுற்றியுள்ள பதற்றம் தொடரும் நிலையில், அடுத்த கட்ட அமெரிக்க நடவடிக்கை முழுமையாக ஜனாதிபதி டிரம்பின் தீர்மானத்தைப் பொறுத்தே இருக்கும்.

