அண்டார்டிகாவின் மிக ஆழமான, கடும் குளிர் நீர்பரப்பில் சுறா மீன் ஒன்று முதல் முறையாக கேமராவில் பதிவாகியுள்ளது. சூரிய ஒளியே எட்ட முடியாத அளவுக்கு ஆழத்தில், வெறிச்சோடிய கடலடியில் மெதுவாக நகர்ந்த அந்த பெரிய சுறா, ஆராய்ச்சியாளர்களுக்கு எதிர்பாராத காட்சியாக அமைந்துள்ளது.
2025 ஜனவரி மாதத்தில் இந்த அபூர்வக் காட்சி பதிவு செய்யப்பட்டதாக ஆய்வாளர் Alan Jamieson தெரிவித்துள்ளார். அந்த சுறா ‘ஸ்லீப்பர் ஷார்க்’ இனத்தைச் சேர்ந்ததாகவும், அதன் நீளம் சுமார் 3 முதல் 4 மீட்டர் வரை இருக்கலாம் என்றும் அவர் கூறினார். “பொதுவாக அண்டார்டிகா போன்ற கடும் குளிர் நீர்பகுதிகளில் சுறாக்கள் இருக்காது என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் நாங்கள் இதைப் பார்க்கவே எதிர்பார்க்கவில்லை” என்றும் அவர் விளக்கினார்.
இந்தக் காட்சிகள், உலகின் மிக ஆழமான கடற்பகுதிகளில் வாழும் உயிரினங்களை ஆய்வு செய்யும் Minderoo-UWA Deep-Sea Research Centre அமைப்பின் கேமரா மூலம் பதிவாகியுள்ளன. அந்த கேமரா, அண்டார்டிகா தீபகற்பத்திற்கு அருகிலுள்ள South Shetland Islands பகுதியில், தெற்கு பெருங்கடல் எனப்படும் Southern Ocean எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்தது.
சுறா காணப்பட்ட இடம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 490 மீட்டர் ஆழத்தில் இருந்தது. அங்கு நீரின் வெப்பநிலை 1.27 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்ததாகவும், அதாவது உறைபனி நிலைக்கு மிக அருகிலான குளிர் சூழல் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தக் காட்சியில், சுறா அருகே ஒரு ‘ஸ்கேட்’ மீன் அமைதியாக கிடந்ததும் பதிவாகியுள்ளது. ஸ்கேட் மீன்கள் அண்டார்டிகா பகுதிகளில் இருப்பது ஏற்கனவே அறிந்த விஷயம் என்பதால், அது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமளிக்கவில்லை.
University of Western Australiaயைச் சேர்ந்த ஆய்வு மையத்தின் நிறுவனர் இயக்குநரான அலன் ஜேமிசன், “இதற்கு முன் தெற்கு பெருங்கடலில் சுறா கண்டறியப்பட்டதாக எந்த பதிவையும் நான் காணவில்லை” என்று கூறியுள்ளார். இதே கருத்தை, ஆய்வில் நேரடியாக ஈடுபடாத Charles Darwin Universityயின் உயிரியல் பாதுகாப்பு நிபுணரும் ஆதரித்துள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் கடல் நீரின் வெப்பநிலை மாற்றங்கள், சுறாக்களை மேலும் தெற்கே, குளிர்ந்த நீர்பகுதிகளுக்கு நகரச் செய்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். ஆனால் அண்டார்டிகா பகுதி மிகத் தொலைவிலும் கடினமான சூழலிலும் இருப்பதால், இத்தகைய மாற்றங்களைப் பற்றிய தரவுகள் மிகக் குறைவாகவே உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

