ஈரானில் பொருளாதார இழப்பு மற்றும் உயர்ந்த வாழ்க்கைச் செலவுகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அமெரிக்க போர்க் கப்பல்கள் அடங்கிய படையை மத்திய கிழக்கு கடற்பகுதிக்கு அனுப்பியதாக அறிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அபாஸ் பகுதியில் கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமல்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, அந்தத் துறைமுகத்தில் ஈரானுக்கு சொந்தமான போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திடீரென துறைமுகப் பகுதியில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா என்ற கோணத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

