யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் புதன்கிழமை 56-வது நாளுடன் நிறைவடைந்தன.
இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 54 நாட்களும், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 56 நாட்களுமாக மொத்தம் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த 110 நாள் அகழ்வுப் பணிகளின் நிறைவில், இதுவரை மொத்தம் 583 மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன. அவை அனைத்தும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி அகழ்வுப் பணிகளின் போது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளின் என்புக்கூடுகளும் வெளிப்பட்டன. மேலும், சில என்புக்கூடுகள் ஒன்றின் மீது ஒன்று பின்னிக் காணப்பட்ட நிலையிலும், என்புக்கூட்டுக் குவியல்களாகவும், ஒழுங்கற்ற முறையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த என்புக்கூடு ஒன்றும் இந்த அகழ்வில் இரண்டாவது முறையாக அடையாளம் காணப்பட்டது.
அகழ்வுப் பணிகளின்போது மனித என்புக்கூடுகளுடன் பல்வேறு பொருட்களும் சான்றுகளாக மீட்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பாடசாலைப் புத்தகப் பைகள், வளையல்கள், பாதணிகள், காலுறைகள், மோதிரங்கள், தாயத்துகள், நாணயக் குற்றிகள் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சில என்புக்கூடுகளுக்கு அருகிலும் அவற்றுடன் தொடர்புடைய நிலையிலும் இரும்புத் தகடுகள், ஆணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் சான்றுப் பொருட்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.
1999ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் செம்மணி பகுதியில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அப்போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டன. அப்போது மொத்தம் 15 மனித உடல் எச்சங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
இந்த நிலையில், சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னர், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் புதிய தகனசாலை அமைப்பதற்கான கட்டுமாணப் பணிகள் இடம்பெற்றபோது மனித எச்சங்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், நீதிமன்றக் கண்காணிப்புடன் முறையான அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த இடம் தொடர்பில் உண்மை கண்டறியும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்தக் கட்டத்திற்கு 56 நாட்கள் நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இடைநிறுத்தங்கள் மற்றும் மீள ஆரம்பிப்புகளுடன் இந்த அகழ்வு நடவடிக்கை தொடர்ந்த நிலையில், 56-ஆவது நாளுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அகழ்வுப் பணிகள் சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் தொல்பொருள் நிபுணர்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் நீதிமன்றக் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.
செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 583 மனித என்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அடையாளம் காண்பது, மரணத்திற்கான காரணங்களை ஆராய்வது மற்றும் சாத்தியமானால் காணாமல்போனவர்களின் குடும்பங்களுடன் தொடர்புபடுத்துவது அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கைகளாக அமைகின்றன.
மனித எச்சங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்வதுடன், தேவையான இடங்களில் மரபணு பரிசோதனைகள் உள்ளிட்ட தடயவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
