டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் புகை விசிறல் (fogging) நடவடிக்கை மட்டும் டெங்கு ஒழிப்பிற்கான முழுமையான தீர்வாக அமையாது என்றும், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன, டெங்கு பரவலை கட்டுப்படுத்த சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் மூலம் புகை விசிறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இது ஒரு முழுமையான வெற்றிகரமான நடவடிக்கை அல்ல என சுட்டிக்காட்டினார்.
நுளம்பின் வாழ்க்கைச் சுழற்சியில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு மற்றும் முதிர்ந்த நுளம்பு என நான்கு நிலைகள் காணப்படுகின்றன. ஆனால் புகை விசிறல் மூலம் பெரும்பாலும் முதிர்ந்த நுளம்புகள் மட்டுமே அழிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரு முறை புகை விசிறல் நடவடிக்கையை மேற்கொள்ள 20,000 ரூபாய்க்கும் அதிகமான செலவு ஏற்படுவதாகவும், பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் நுளம்புகளை மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கு பயனளிக்கும் தேனீக்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் சில பூச்சி இனங்களையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் டெங்கு கட்டுப்பாட்டில் நுளம்பு பெருக்கம் ஏற்படும் இடங்களை அழித்தல், நீர் தேங்கும் பகுதிகளை அகற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 52,068 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
