ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான பழமையான களிமண் பலகைகள் பல ஆண்டுகளாக அருங்காட்சியகங்களிலும் ஆராய்ச்சி மையங்களிலும் சேமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் பல உடைந்தும், சில எழுத்துக்கள் மங்கியும் இருந்ததால், நிபுணர்களுக்குக் கூட அவற்றை வாசிப்பது கடினமாக இருந்தது. இப்போது 'Palaeographicum' எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, இந்தச் சிக்கலைத் தீர்க்க உதவுகிறது.
ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் மெயின்ஸ் அறிவியல் அகாடமியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த AI, குனிஃபார்ம் (Cuneiform) எழுத்துக்களில் உள்ள சிறிய கைஎழுத்து வேறுபாடுகளைக் கண்டறிகிறது.
முன்பு பல நாட்கள் எடுத்துக் கொண்ட வேலை, இப்போது சில நிமிடங்களில் முடிவடைகிறது. குனிஃபார்ம் எழுத்துகள், கிட்டத்தட்ட 3,500 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டைட் நாகரிகத்தில் சட்டங்கள், வணிக ஒப்பந்தங்கள், அரசியல் கடிதங்கள் போன்றவற்றைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்டன.
இந்தக் களிமண் பலகைகள் உடைந்து உலகின் பல அருங்காட்சியகங்களில் சிதறியுள்ளதால், அவற்றை மீண்டும் இணைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. AI கருவி, 70,000 புகைப்படங்களில் உள்ள 50 லட்சம் சின்னங்களை ஆய்வு செய்து, ஒரே எழுத்தாளரின் கையெழுத்துப் பாணியை அடையாளம் காண்கிறது.
இதன்மூலம், எந்தப் பலகைகள் ஒரே இடத்தில் எழுதப்பட்டவை என்பதைக் கண்டறிய முடிகிறது. மேலும், இந்த AI கருவி, திகதி இடப்படாத பலகைகளின் காலத்தை எழுத்துப் பாணியின் அடிப்படையில் கணிக்க உதவுகிறது. இதனால், வரலாற்று ஆய்வாளர்கள் புதிய தகவல்களை விரைவாகக் கண்டறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பணியில் மனித நிபுணத்துவம் இன்னும் அவசியம்தான் என்றாலும், AI கருவி வேகத்தையும் துல்லியத்தையும் பெரிதும் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மறைந்திருந்த கதைகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

