வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் நிலநடுக்கங்களால் 6.8 மில்லியனுக்கும் (68 லட்சம்) அதிகமான மக்கள் பாதிக்கப்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை (UN) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா.வின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (International Organisation for Migration - IOM) பிரதிநிதி ஜோ ப்ரென்னன் (Zoe Brennan) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, சமீபத்திய மக்கள்தொகை மற்றும் சேதக் கணிப்புகளின் அடிப்படையில், ஏறக்குறைய 6.76 மில்லியன் மக்கள் இந்த பேரிடரால் பாதிக்கப்படக்கூடும் என்றார்.
ஆரம்ப செயற்கைக்கோள் மதிப்பீடுகள் (satellite mapping assessments) குறிப்பிடத்தக்க தகவல்களை வெளியிட்டுள்ளன. தலைநகர் கராகஸின் (Caracas) வடமேற்கே உள்ள கடலோர நகரமான கேடியா லா மாரில் (Catia La Mar) 31.5% கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த புதிய எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதும், 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 250-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சர்வதேச நாடுகள் உதவிகள் வழங்க முன்வந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
