ஜப்பான் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான ஆளும் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
முன்னதாக ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷிகெரு இஷிபா தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து கட்சியின் முக்கிய தலைவராக இருந்த சனே தகைச்சி நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் அரசியல் வாரிசாக கருதப்படும் அவர், முன்னதாக நிதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் பல முக்கிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த சனே தகைச்சி, சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானில் ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் தங்களின் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தலை நடத்துவது வழக்கமாக உள்ளது. அதன்படி, லிபரல் கட்சியின் பலத்தை மீட்டெடுக்க சனே தகைச்சி இரு அவைகளையும் கடந்த மாதம் கலைத்து தேர்தலை அறிவித்தார்.
மொத்தம் 465 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பெற 233 இடங்கள் தேவைப்பட்டது. இந்த தேர்தலில் சனே தகைச்சி தலைமையிலான விடுதலை ஜனநாயகக் கட்சி 316 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் மீண்டும் பிரதமராக ஆட்சியை தொடரவுள்ளார்.

