அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் வூஸ்டர் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் கேடா மாவட்டம் நாடியாத் பகுதியைச் சேர்ந்த ஹிதேஷ்பாய் சுதார் தனது மனைவி ஹினாபென் மற்றும் மகள் இஷானி (20) உடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர்கள் ஓஹியோ மாகாணம் வூஸ்டரில் உள்ள ஒரு ஓட்டலில் வசித்து வந்ததுடன், அதே ஓட்டலில் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஹிதேஷ்பாய் சுதார் அந்த ஓட்டலில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகள் அருகிலுள்ள நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் வேலை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாலை நேரத்தில் ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மற்றும் புகை மிக வேகமாக பரவியதால் கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாத நிலை உருவானது. இதேவேளை, சில இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தில் சிக்கிய ஹிதேஷ்பாய் சுதார், அவரது மனைவி ஹினாபென் மற்றும் மகள் இஷானி ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்ட போதிலும், அவர்களை மீட்க முடியவில்லை.
தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மீட்பு பணிகள் சிரமமாகியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
