வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இராணுவ நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், அந்த இரகசியத் தகவலை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் விசேட படையில் மாஸ்டர் சார்ஜென்டாகப் பணியாற்றும் 38 வயதான கேனான் வான் டைக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 3ஆம் திகதி மதுரோவை அவரது கராகஸ் இல்லத்திலிருந்து பிடிக்கும் திட்டத்தில் வான் டைக் ஈடுபட்டிருந்தார். இந்த இராணுவ நடவடிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், மதுரோ விரைவில் பதவியிலிருந்து அகற்றப்படுவார் என்றும், அமெரிக்கப் படைகள் வெனிசுவேலாவிற்குள் நுழையும் என்றும் 'பாலிமார்க்கெட்' (Polymarket) என்ற எதிர்வு கூறல் சந்தையில் வான் டைக் பந்தயம் கட்டியுள்ளார்.
மதுரோ பதவியிறக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், குறிப்பாக டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரையிலான காலக்கட்டத்தில், வான் டைக் சுமார் 33,000 டொலர்களைப் பந்தயமாகக் கட்டினார். அந்தச் சமயத்தில் மதுரோ பதவி விலகுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே கருதப்பட்டதால், பந்தயத்தின் மதிப்பு அதிகமாக இருந்தது.
மதுரோ பிடிபட்டதை அடுத்து, வான் டைக் கட்டிய பந்தயத்திற்குக் கிட்டத்தட்ட 400,000 டொலர்கள் (சுமார் 12 கோடி இலங்கை ரூபாய்) லாபமாகக் கிடைத்துள்ளது. பணத்தைப் பெற்றவுடன் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில், தனது கணக்கை நீக்குமாறு அவர் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நியூயோர்க்கின் மன்ஹாட்டன் மத்திய நீதிமன்றத்தில் வான் டைக் மீது பொருட்கள் மோசடி மற்றும் இரகசியத் தகவலைத் தனிப்பட்ட லாபத்திற்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது அவர் 250,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதுடன், இராணுவக் கட்டளையின்றி துப்பாக்கிகளை வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரகசியத் தகவலைப் பயன்படுத்திச் சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஒரு எதிர்வு கூறல் சந்தை தொடர்பான வழக்கில் அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்துள்ள முதல் குற்றச்சாட்டு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
