கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக, புதிய 125 நாள் வேலைத்திட்டம் இன்று (ஜூலை 1, 2026) முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
புதிய திட்டத்தின் கீழ் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை வழங்கப்படாவிட்டால், விதிகளின்படி வேலை இழப்பு உதவித்தொகை வழங்கப்படும்.
சம்பளம் வழங்குவதில் புதிய நடைமுறை
திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் அல்லது அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் கூலி வழங்கப்பட வேண்டும். சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் சேர விரும்பும் குடும்பங்கள் கிராம பஞ்சாயத்தில் பதிவு செய்து வேலை உறுதி அட்டையைப் பெற வேண்டும். இந்த அட்டை 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும், அதன் செல்லுபடியாகும் காலம் 3 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவினருக்கு முன்னுரிமை
தனியாக வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பழங்குடியினர், விடுதலையான கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு வேலை அட்டைகள் வழங்கப்படும்.
மேலும், திட்டத்தில் பணிபுரிபவர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும் என்ற நடைமுறையும் தொடரும். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பயோமெட்ரிக் வருகை பதிவு
வேலைக்கு வரும் தொழிலாளர்களின் வருகை இனி பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். பணிகளின் கண்காணிப்பு ஜியோ-டேக்கிங் மற்றும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்படும். திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும்.
வேலை வழங்கும் இடம் மற்றும் கூடுதல் கூலி
முடிந்தவரை தொழிலாளர்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வேலை வழங்கப்படும். அதற்கு மேல் தொலைவில் வேலை வழங்கப்பட்டால் கூடுதலாக 10 சதவீத கூலி வழங்கப்படும்.
விவசாய பணிகளான விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, ஆண்டுக்கு குறிப்பிட்ட நாட்களில் திட்டப்பணிகள் நிறுத்தப்படும் நடைமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள்
வேலை நடைபெறும் இடங்களில் குடிநீர், ஓய்வெடுக்க நிழல் வசதி, முதலுதவி பெட்டி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்படும்.
வேலையின் போது காயம் ஏற்பட்டால் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ செலவுகள் மற்றும் விதிகளின்படி நிவாரண உதவிகளும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்படும். வருகைப் பதிவுகள், செலவுக் கணக்குகள் மற்றும் பணிகள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
புதிய 125 நாள் வேலைத்திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். திட்ட செலவில் ஒரு பகுதியை மத்திய அரசும், மீதியை தமிழக அரசும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
