வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், நோபல் அமைதிப் பரிசு வெற்றியாளருமான மரியா கொரினா மச்சாடோ (María Corina Machado), அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் போது, மச்சாடோ தனக்கு வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை அதிபர் ட்ரம்ப்பிடம் வழங்கியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் பிணைக் கைதியாகப் பிடித்த பிறகு, மச்சாடோவும் ட்ரம்ப்பும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
2024 தேர்தலில் மச்சாடோவின் இயக்கம் வெற்றி பெற்றதாகக் கூறினாலும், ட்ரம்ப் அவரை இன்னும் நாட்டின் தலைவராக அங்கீகரிக்கவில்லை. மாறாக, தற்காலிகத் தலைவராக இருக்கும் டெல்சி ரோட்ரிக்ஸுடன் (Delcy Rodríguez) அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அதிபர் ட்ரம்ப்புடனான சந்திப்பிற்குப் பிறகு ஆதரவாளர்களிடம் பேசிய மச்சாடோ, "நாங்கள் அதிபர் ட்ரம்ப்பை நம்பலாம்" என்று உறுதியளித்தார்.
அமெரிக்கப் புரட்சியில் பங்கேற்ற மார்குவிஸ் டி லாஃபாயெட், ஜார்ஜ் வாஷிங்டனின் உருவம் பொறித்த பதக்கத்தை வெனிசுலாவின் தந்தை சைமன் பொலிவருக்கு வழங்கிய வரலாற்று நிகழ்வை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், 200 ஆண்டுகளுக்குப் பிறகு வாஷிங்டனின் வாரிசாகக் கருதப்படும் ட்ரம்ப்பிற்கு, வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பைப் பாராட்டி இந்தப் பதக்கத்தை வழங்குவதாக மச்சாடோ உருக்கமாகத் தெரிவித்தார்.
இருப்பினும், ட்ரம்ப் அந்தப் பதக்கத்தை ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
இதற்கிடையில், நோபல் பரிசு என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்பட முடியாத ஒன்று என்று நோபல் கமிட்டி தெளிவுபடுத்தியுள்ளது.
"நோபல் பதக்கம் கைமாறலாம், ஆனால் நோபல் வெற்றியாளர் என்ற பட்டம் ஒருபோதும் மாறாது" என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

