விண்வெளி ஆராய்ச்சியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நிலவில் நகரம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை உருவாக்கும் திட்டம் நீண்டகால இலக்காக இருந்தாலும், அதற்கு முன்பாக நிலவில் நகரம் அமைப்பது சாத்தியமானதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், செவ்வாயை விட நிலவு பூமிக்கு அருகில் இருப்பதால் அங்கு விண்கலங்களை அடிக்கடி அனுப்புவது எளிதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். நிலவிற்கு செல்ல சுமார் இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், செவ்வாய் கிரகத்தை அடைய சுமார் ஆறு மாதங்கள் தேவைப்படுகின்றன. இந்த நேர வித்தியாசம் செலவினத்தையும் தொழில்நுட்ப சவால்களையும் குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்நுட்ப ரீதியாக நிலவில் நகரம் அமைப்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் என்றும், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் செயல்படும் நகரம் ஒன்றை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

